சென்னை: தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி,  ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் கொடுக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதுடன்,  புகார்  கொடுக்க வசதியாக தொலைபேசி எண்களையும் வெளியிட்டு  உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதே வேளையில், தனியார் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் பல பேருந்துகளில் அதிக கட்டணத்துடன் கூடிய முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இதை தடுக்கும்வகையில், பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவ சங்கர், தமிழக அரசுத் தரப்பில், தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக வும்,. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11,176 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், இதனை ஒருங்கிணைக்கவும் பயணிகளுக்கு உதவுவதற்காகவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என கூறியவர்,

தனியார் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151, 04424749002, 04426280445, 04426281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்.