சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடி வாரண்டு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன். வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வாக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கில்,

“நான் பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துக்களில் பணியாற்றியுள்ளேன். பஞ்சாயத்து நிதியை தவறாக கையாண்டதாக என்னை கடந்த 2017-ம் ஆண்டு கலெக்டர் பணியிடை நீக்கம் செய்தார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு ஆகும். ஒவ்வொரு பண பரிவர்த்தனையும் பஞ்சாயத்து தலைவரின் ஒப்புதல் அடிப்படையில் நடந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் என் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அனைத்து பணப் பலன்களுடன் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி தீர்ப்பு அளித்தது. இதுவரை எனக்கு பணி வழங்கவில்லை.

மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியும் எந்த பயனும் இல்லை. ஆகவே, உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதித்துள்ள சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, ஆட்சியர் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று அவர் கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து ஆட்சியர் உள்ளிட்டோரை ஆஜராக ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜராகி வாதிட்டார்.

விசாரணைக்கு ஆட்சியர் நேரில் ஆஜராகவில்லை என்பதால் சேலம் மாவட்ட ஆசியர் பிருந்தா தேவிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.