நெல்லை

நெல்லையில் பிரதமர் மோடியை உலகின் 8 ஆவது அதிசயம் என புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரதமராக 3-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் , மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..

திருநெல்வேலி மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் என்பவர் உலகின் எட்டாவது அதிசயமே என்ற பெயரில் போஸ்டர் ஒட்டி மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த சுவரொட்டியில் மோடி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து பரிமாறுவது போல் படம் அச்சிடப்பட்டுள்ளது.

அதில் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் படமும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகி ஒருவர் மோடியும் ஜெயலலிதாவும் இருக்கும் ஒரே படத்தினை போஸ்டராக ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அதிமுக இடையே மீண்டும் கூட்டணி உறவு ஏற்படுமா என்ற பேச்சு பரவலாக எழுந்த நிலையில் இந்த சுவரொட்டி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.