சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி/ எஸ்டி மாணாக்க;ரகள்,  யுபிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வழங்க உள்ளதாக  தாட்கோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோர் தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி –2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர்.அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஒரு வருட காலம் யுபிஎஸ்சி தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை -முதன்மை நிலை பயிற்சியினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பியிற்சிக்கு தகுதி பெற மாணவர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்மூகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதி பெறும் தேர்வர்களின் முழு செலவை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்தில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.