சென்னை: தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃ பார்முலா 4 பந்தயம் இன்று இரவு  சென்னையில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சர்ச்சைக்கு மத்தியில் நீதிமன்ற அனுமதியுடன்,  சென்னையில் முதல் முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் பார்முலா 4 ரேஸ் சர்க்யூட் கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனால், சென்னையில் எந்தவித  போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று மற்றும் நாளை இரவு நடைபெறுகிறது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் ஃபார்முலா 4 சர்க்யூட் பந்தயத்தை நடத்தக்கூடிய நகரமாக சென்னை திகழ்கிறது.

இந்த கார் பந்தயமானது போர் நினைவுச் சின்னத்திலிருந்து தொடங்கி ராஜாஜி சாலை வழியாக 3.5 கிலோமீட்டர் தொலைவு வரை நடைபெற உள்ளது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக பந்தய தளம் அமைக்கப்பட்டுள்ளது.  போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. மாலை 5.50 மணி முதல் 6.30 மணி வரை பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

அந்தப் போட்டிக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ரேஸ் நடைபெறக்கூடிய பகுதி சுற்றிலும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் எந்தவித சிக்கலும் இல்லாத வகையில் இந்த போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் கடந்த 30 ஆம் தேதி முதல் வருகின்ற 01 ஆம் தேதி வரை மதியம் 12.00 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக காமராஜர்சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

அதேபோல், மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படுகிறது. சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் போக்குவரத்து செல்ல தடை விதித்து மூடப்பட்டுள்ளது.

மேலும், காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இன்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா கார் ரேஸ்: கடற்கரை சாலை, அண்ணாசாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!