சென்னை: சென்னை கார் பந்தயத்திற்கு உரிய விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டதா? என்பது குறித்து போக்குவரத்து காவல்துறை மதியம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்துள்ளது.

மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சென்னை கடற்கரை சாலை, அண்ணா சாலை பகுதியில் கார் ரேஸ் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இந்த போட்டிகள் நாளை  மறுதினம் அதாவது ஆகஸ்ட் 31 ந்தேதி தொடங்க உள்ளது. இதற்காக முக்கிய சாலைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, போக்குவரத்தும் மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.  இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டள்ளது. ஆனால்,. அதை கண்டுகொள்ளாத தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். இதை மறுத்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பந்தயம் நடத்த அரசு செலவிட்ட தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து பந்தயம் நடத்தும் அமைப்பு தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது எனவும், அந்த வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கினார்.

பொது சாலையை அணுகும் உரிமையை தடுக்க முடியாது எனவும், பந்தயம் நடத்துவதற்கான வழித்தடத்தை ஆய்வு செய்து சர்வதேச அமைப்பு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே சென்னையின் புறநகர் பகுதியான, இருங்காட்டுக் கோட்டையில் கார் பந்தயம் நடத்துவற்கான இடம் உள்ளது.  அங்கு கார் பந்தயம் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அங்கு  சுற்றுச்சுவருடன் கூடிய சுற்றுப்பாதையில் கார்   பந்தயம் நடத்த எந்த எதிர்ப்பும் இல்லை என குறிப்பிட்டதுடன்,

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை பந்தயத்துக்காக மூட முடியாது எனவும் பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் பந்தயத்தை எப்படி பொதுநலன் என கூற முடியும் என்றும் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கடந்த முறை கார் பந்தயத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்கக்கூடாது, ஒலி கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 நிபந்தனைகளுடன் பந்தயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் எந்த நிபந்தனையும் மீறப்படவில்லை என்றார்.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு எந்த இடையூறும் இருக்காது. பந்தயம் நடத்தப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்படும். பந்தயத்துக்கு அரசு எந்த செலவும் செய்யவில்லை. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதே காரணத்துக்காக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.

இதையடுத்து, கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்று கூறியதுடன், இதுதொடர்பாக,  போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்துள்ளார்.