மதுரை: மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்? என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி  உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்துக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கவேண்டும் என்று உத்தரவிடக்கோரி பாஸ்கர் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, மத்தியஅரசு வழக்கறிஞரிடம்,   மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் மேலும் பல கேள்விகளை எழுப்பியது.

மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?  என கேள்வி எழுப்பிய நீதிபதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை  எப்போது கட்டி முடிப்பீர்கள்? என சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் கூறிய மத்தியஅரசின் வழக்கறிஞர், கொரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமானம் தள்ளிபோனதாக கூறியதுடன், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன்,   கொரோனா 2022ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது என்று கண்டித்ததுடன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து  விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.