சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இரண்டு புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கத்தை  வருகிற 31ந் தேதி  பிரதமர் மோடி  காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

அதன்படி,  நாகர்கோவில்–சென்னை எழும்பூர் மற்றும் மதுரை–பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.  இதன்மூலம் தமிழ்நாட்டில் வந்தேபாரத் ரயில் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போதுவரை  5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை–பெங்களூரு ஆகிய 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது,

‘நாகர்கோவில்-சென்னை எழும்பூர், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையில் இயக்கப்பட உள்ள 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி வரும் 31ந்தேதி காணொளி காட்சி மூலம்  தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.

புதிய வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும்.

எழும்பூர் – நாகர்கோவில் (20627–20628) இடையிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் இருக்கும். இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ், மீதமுள்ள பெட்டிகள் ஏ.சி. சேர் காராக இருக்கும் .

புதிய வந்தே பாரத் ரெயிலானது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலை சென்றடைய உள்ளது. மறுமார்க்க மாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயிலானது இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ஆக ஒரேநாளில் சென்று திரும்பும் வகையில் இயக்கப்பட உள்ளது. புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ்க்கு அடுத்தபடியாக இந்த பாதையில் இயக்கப்படக்கூடிய வேகமான ரெயிலாக இது இருக்கும்.

தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணத்தை முடிக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல, மதுரையில் இருந்து பெங்களூரு (20671–20672) வரையில் இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரெயிலானது மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயில் 8 பெட்டிகளை கொண்டது. இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வார்த்தின் 6 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.