சென்னை:  தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற  தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், நீர் நிலைகள், அரசு  மற்றும் புறம்போக்கு இடங்கள் அதிகாரிகள் உதவியுடன் அரசியல்வாதிகள் கபளிகரம் செய்து,. பின்னர் விற்பனை செய்து கல்லா கட்டி வருகின்றனர். இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற , பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2004ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அரசிடம் கேட்டு  விளக்கமாக பதில் சொல்வதாக தெரிவித்ததுடன்,   ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், அகற்றும் பணிகளை கண்காணிக்கவும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு  குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது? எத்தனை ஹெக்டேர் பரப்பு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன?  இன்னும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், அரசு அமைத்துள்ள   குழுக்களால் என்ன பயன் ஏற்பட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பியதுடன், அரசு அமைத்துள்ள  குழுக்கள்  நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக  முறையாக கண்காணிக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், வழக்கில் தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

அதாவது,  தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.