சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி  அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.  இந்த அறிக்கை மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்  மதிமுகவும்  புறக்கணிப்பதாக   அறிவித்துள்ளது.

ஆகஸ்டு  15ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும் நிகழ்சி வாடிக்கையாக நடைபெறும் இதில் மாநில அரசின் முதல்வர், அமைச்சர்கள் மற்றும்  பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய விருந்தினர்களுக்கு ஆளுநர்  சார்பில் அழைப்பு விடுக்கப்படும்.   இந்த அழைப்பை ஏற்று பலர்  மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வர்.

ஆனால், இந்த  ஆண்டு  தமிழக ஆளுநர் பதவி  கடந்த மாதத்துடன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது பதவி நீட்டிப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், ஆர்.என்.ரவியே  ஆளுநராக இருந்து வருகிறார். இந்த  சூழலில்  ஆளுனரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாக உள்ளது. அதனால்,  ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள மாட்டாரக்ள் என   காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  எக்ஸ் தள பதிவில், சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.

அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.