சென்னை: தமிழகத்தில்  திருவண்ணாமலை உள்பட 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொட்ங்கி வைத்தார்.  தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

 திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 12) தொடக்கிவைத்தார். இதன் மூலமாக தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனப்டி, இன்று புதிய மாநகராட்சிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஆக. 12) தொடக்கிவைத்தார்.

மேலும்,  நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 800.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கிவைத்தார். மேலும் ரூ. 1,192.45 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக புதிய மாநகராட்சி குறித்த முதலமைச்சர் சட்டப்பேரவையில்அறிவித்ததைத் தொடர்ந்து,   4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு இருந்தார். தி அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.

1998-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த 4 புதிய மாநகராட்சிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி அருகே அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு அடையும். அது மட்டுமின்றி இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலா பயணிகள், வணிக நிறுவனங்கள் தொழில் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயம்! சட்டசபையில் மசோதா தாக்கல்