சென்னை: திமுக  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்கலாம்”  என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.

தன்மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய  தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2002-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். அப்போது இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு சென்றது. பின்பு, அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தது. பின்னர் அவரது சொத்துக்களையும், அவருடைய குடும்பத்தினரின் சொத்துக்களையும் 2024ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் முடக்கியது.

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போத,  அமலாக்கத்துறை சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, அமலாக்கத்துறை இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆதலால் வழக்கை ரத்து செய்ய கூடாது என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம் எனக் கூறி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.