திருநெல்வேலி

திருநெல்வேலி புதிய மேயர் ராமகிருஷ்ணன் திருநெல்வேலியை இந்தியாவின் நம்பர் 1 மாநக்ராட்சியாக மாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டதால் மேயர் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதத்தை ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். அக்கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் புதிய மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து நடந்த கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் நெல்லை மாநகராட்சிக்கு திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது..

திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பவுல்ராஜ் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்துநகராட்சி புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. சரியாக 12 மணியளவில் தேர்தல் தொடங்கியது.

அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொருவராக தங்களது வாக்கினை செலுத்தினர் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 30 வாக்குகளை பெற்றார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றார்.  தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும்  அவரிடம் ஆணையாளர் வழங்கினார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்,

“இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன். எனக்கு வாக்காளிக்காத மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய சகோதரர்கள் தான் என எண்ணி 55 வார்டுகளும் என்னுடைய வார்டாக நினைத்து நான் பணியாற்றுவேன். சென்னை மாநகராட்சி போன்று திருநெல்வேலிமாநகராட்சியை மாற்றுவேன்.

45 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வந்த சாதாரண தொண்டனை திருநெல்வேலி மாநகராட்சி மேயராக ஆக்கியுள்ளனர். சுத்தமான குடிநீர் 55 வார்டுகளுக்கு 24 மணி நேரம் கிடைக்கும் வகையிலும், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவேன்.”

என்று தெரிவித்துள்ளார்.