சேலம்

வேற்று கிரக வாசியான ஏலியனுக்கு சேலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

பல நவீன வளர்ச்சிகளை உலகம் அடைந்து வரும் நிலையில், மக்களின் வழிபாட்டு முறையும் அதற்கு ஏற்றார் போல மாறி வருகிறது. அதில் ஒறாக சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்தக் கோவில் ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என அழைக்கப்படுகிறது.  இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை கட்டும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. எங்குமே இதுவரை ஏலியன் சித்தர் இல்லை என்றும் இங்குதான் உள்ளது என லோகநாதன் தெரிவித்துள்ளார்.

கோவிலில் தற்போது திருப்பணி நடைபெற்று வருவதால் குறைந்த அளவு பூஜை நடப்பதாகவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் என்றும் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

ஏலியன்கள் இருப்பது உண்மையா? அல்லது திரைப்படங்களில் மட்டுமே காட்டப்படும் கற்பனையா என விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் ஏலியனை தெய்வமாக நினைத்து, ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.