சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் கள் விற்பனை தடையை நீக்குவது குறித்து பரிசீலனை செய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஊழல் நிலவுவதாகவும், மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 முதல் 50 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டி சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் முரளிதரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும், மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி சூப்பர் மார்கெட்டுகள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையின் போது கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது, மாநில அரசின் கொள்கை முடிவு எனவும் இது தொடர்பாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீதிபதிகள் இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும். சூப்பர் மார்கெட்டுகள், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.