மேட்டூர்

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115 அடிய தண்டி உள்ளது.

தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 111.20 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 115.10 அடியை தாண்டியுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 85.86 டிஎம்சியாக உள்ளது. அநேகமாக இன்று மேட்டூர் அணை முழுமையாக நிரம்பலாம் என்று நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.