பழனி

கடும் சூறாவளிக் காற்று வீசியதால் பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது. பழனி மலைப் பகுதியிலும் சூறாவளி காற்று சுழன்று அடிப்பதன் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் சில தினங்களாகவே ரோப்கார் சேவையை சீராக இயக்க முடிவதில்லை.

பழனியில் வழக்கம் போல நேற்றும் பகல் முழுவதும் பழனி பகுதியில் காற்று சுழன்று அடித்ததால் ரோப்காரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.  நேற்று காலை 7 மணிக்கு ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், காலையில் ரோப்கார் இயக்கப்படவில்லை.

பகல் முழுவதும் காற்றின் வேகம் குறையவில்லை. எனவே மாலை 5.30 மணி வரை ரோப்கார் இயக்கப்படவில்லை. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லவும், தரிசனம் முடிந்து கீழே இறங்கவும் ரோப்கார் நிலையத்துக்கு வந்த பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து ரோப்கார் இயக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் மின்இழுவை ரயில் மற்றும், படிப்பாதை வழியாக கீழே சென்றனர்.