சென்னை

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநகர பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம் ரயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதற்காக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இன்று   காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ரயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ரயில்கள் ரத்து காரணமாக சென்னை மற்றும் புறநகரில் உள்ள பெருந்து நிலையங்களிலும், மாநகரப் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோவதால் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிக அளவிலான வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன.  எனவே சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க அதிக அளவில் கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.