சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன்  ஜாபர் சாதிக் மனைவி மற்றும் சகோதரர் முன் ஜாமீன் கோரி  மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு  பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது மனைவி மற்றும் பலரிடமும் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களின் வங்கி ஆவணங்களையும் ஆய்வு செய்தது.

இதில், ஜாபர் மனைவி  அமீனா பானுவின் வங்கி கணக்கில் இருந்து, சினிமா பட இயக்குனர் அமீருக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது என்பதும்,  வெளி நாடுகளில் இருந்து, அமீனா பானுவின் வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது என கூறியுள்ளனர்.

இந்த நிலையில், வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருமுறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்துள்ளதாகவும், இன்று ஆஜராகும்படி நேற்றிரவு 8.41 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கிலோ அல்லது அமலாக்கத்துறை வழக்கிலோ தங்களது பெயர் இடம் பெறாத நிலையில், உள்நோக்கத்துடன் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு (ஜூலை 23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், இந்த வழக்கில் அரசியல் சாயம் பூச அமலாக்கத்துறை நினைப்பதாக கூறினார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “இந்த வழக்கில் தாங்கள் அரசியல் சாயம் பூச நினைப்பதாக ஜாபர் சாதிக்கே இதுவரை கூறவில்லை எனவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு தொடர் குற்றவாளி என்றும் தெரிவித்தார். மேலும், இந்த மனு குறித்து விரிவாக பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென” கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

போதை பொருள் கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடியில் முக்கிய புள்ளிகளுக்கு பங்கு! ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்…