சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர், விதிகளுக்கு  மாறாக, தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச்சென்றது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏ-க்கள் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிமைக்குழுவால் அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது.

ஆனால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று (ஜூலை 22) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருத்தனர்.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தீர்ப்பைத் தொடர்ந்தே சட்டப்பேரவை தலைவரின் உத்தரவு மற்றும் உரிமை குழு விசாரணை மீதான அதிகாரம் குறித்த சர்ச்சைகள் முற்றுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.