சென்னை: சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான தனியாருக்கு சொந்தமான  சிவன் கோயிலுக்கு, தக்காரை நியமித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள திருவாலீஸ்வரர் – திரிபுரசுந்தரி கோயில் உள்ளது. பழமையான கோயிலான இது 700 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயில் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த கோவிலை நிர்வகித்து வந்த ரவி கே விஸ்வநாதன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில்,  தனது தாத்தா நீலமேகம் பிள்ளை என்பவரால் கடந்த 1941-ம் ஆண்டு கிரயப்பத்திரம் மூலம் கோவில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வாங்கியவை என்பதால், இந்தக்கோயில் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது என்றும், இதில்,  அறநிலையத் துறை இக்கோயிலில் நிர்வாகம் செலுத்த முடியாது என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.  மேலும்,  “நெற்குன்றத்தில் உள்ள திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயில் 700 ஆண்டுகள் பழமையானது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இதை அறநிலைய துறை தொல்லியல் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி உறுதி செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி 700 ஆண்டுகள் பழமையான கோயிலை கிரையப்பத்திரம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியாது.மேலும், தாத்தா பேரனுக்கு எவ்வாறு கிரையப்பத்திரம் எழுதி வைத்தார் என்பது தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றும் கூறினார்.

இதையேற்ற நீதிபதி பவானி சுப்பராயன், திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயிலுக்கு நியமிக்கப்பட்ட தக்கார் நியமனம் செல்லும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.