சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக  தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10.25 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 74 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர்  ஜெயலலிதா, டிசம்பர் 5ஆம் தேதி 11.30 மணிக்கு மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

அவரது சிகிச்சை குறித்த விவரங்கள் வெளியே தெரியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அவரை யாரும் பார்க்கவும் அனுமதிக்கப்பட வில்லை. இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.  மேலும் அவரது உடல்நிலை பாதிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. அந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான  ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,   ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும், அந்த அறிக்கை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவரது உடலை எம்பால்மிங் செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள தாகவும் குற்றம் சாட்டப்பட்டது

. இதையடுத்து, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.