திருவனந்தபுரம்: ஆடி மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 20ந்தேதி வரை என 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இந்த காலக்கட்டத்தில் பதிவு செய்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதப்பிறப்பின்போதும் கோவில் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் தொடர்ந்து 40 நாட்கள் நடை திறந்திருக்கும். அப்போது நாடு முழுவதும் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

இதைத்தொடர்ந்து, கோவிலில்  நாளை(16-ந்தேதி) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், எப்போதும்போல  இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

மேலும்,  கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாதாந்திர பூஜை முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.