சென்னை:  தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம்  அமைவது உறுதியாகி உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழை  தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்து உள்ளது.

வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.  இதுதொடர்பாக சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம்வின்பாஸ்ட்  தொழிற்சாலை பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார். இதையடுத்து,   தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சிகளை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தி தொழில்கள் அமைக்க பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு வருகிறது. அதன்படி, 2024ம் ஆண்டு  ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் சார்பில் நிறுவன உரிமையாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது,  வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனமும் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க முன் வந்தது. அதையடுத்து, வின்ஃபாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன்  ஒப்பந்தம் போட்டது. தொடர்ந்து ஆலை அமைக்க தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  சார்பில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, தொழிற்சாலையை அமைக்க, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீட்டில் புதிதாக அமையவுள்ள மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு கடந்த பிப். 25-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில்  ஆலை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளன. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஆட்டோ ஹப் மற்றும் இந்தியாவின் EV தலைநகரமாக தமிழ்நாடு வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.