சென்னை: தமிழ்நாடு முழுவதும் குரூப்1 முதல்நிலை தேர்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த தேவை மாநிலம் முழுவதும் 2,38,247 போ்  எழுதுகின்றனர். இந்த தேர்வானது காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1மணி வரை நடைபெறும்.

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை அறிவித்து, தேர்வு நடத்தி காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அதன்படி,  குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது.

அதன்படி, குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல் நிலை தேர்வு தகுதி தேர்வு மட்டுமே. இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துகொள்ளப்படாது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்வுக்கு  2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் இன்று குரூப் 1 தேர்வு எழுத உள்ளனர்.

குரூப்1 தேர்வுக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மையம் என்ற வகையில் மொத்தம் 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மையங்களில் 797 தோ்வுக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 37,891 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வை நடத்த முதன்மை கண்காணிப்பாளா்களாக 797 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை தேர்வு தொடங்கி உள்ளது.

முன்னதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு  வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில்,  தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியான பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்றுஎச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்றிருக்க வேண்டும்.

காலை 9 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு மையத்திற்கு கட்டாயமாக அனுமதி சீட்டினை எடுத்துச்செல்ல வேண்டும்.

அதோடு, ஆதார் அட்டை/ பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

அனுமதி சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றாலோ, தேர்வர்கள் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு, அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் அடையாள அட்டை நகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க வேண்டும்.

ஓஎம்ஆர் தாளை கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கருப்பு நிற பேனா, அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண கடிகாரம் அணிந்து செல்லலாம்.