ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம்.

இலங்கையில் இராவணனோடு யுத்தம் நடத்தி விட்டு அயோத்தி நோக்கி ராமர் சீதை லட்சுமணரோடு செல்லும் போது இவ்விடத்திற்கு வந்துள்ளார். அப்போது இங்குள்ள மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமம் சென்றார். இராமனைக்கண்ட ரிஷி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். தாம் சேமித்து வைத்திருந்த அரிய சாஸ்திரங்கள் எழுதிய ஓலைச் சுவடியை இராமனிடம் கொடுத்தார். அதை இராமர் பணிவுடன் பெற்றுக் கொண்டாராம். ஆனந்தத்தில் மிதந்து, தம்பியாகிய இலட்சுமணரை தம் வலப்புறம் இருக்கச் செய்தார். இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார். ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். வேதத்தின் உட்கருத்தை கேட்டு இன்புற்று, முக்திகோபணிஷத் என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார் என்று தலவரலாறு கூறுகிறது.

கருவறையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சாந்த சொரூபியாக இருக்கிறார். வலக்கையினால் திருமார்பில் முத்திரை பதித்து அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்க, சீதாபிராட்டி வலது கையில் தாமரை மலரையும் இடக்கையை திருவடிச் சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக அண்ணலின் இடப்புறம் அமர்ந்திருக்க, தம்பி இலட்சுமணன் வலப்புறத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சியாக வாயுபுத்ரன் அனுமன் ஸ்ரீ ராமபிரான் எதிரில் சுவடிகளைக் கையில் கொண்டு தரையில் அமர்ந்து வேத வியாக்கியானம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார். முக்கிய அம்சம் என்ன வென்றால் இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீராமனிடம் வில் அம்பு இருக்காது.

யுத்தம் முடித்து இராமர் அயோத்தி செல்லும் வழியில் இங்கு தவம் செய்த சுகபிரம்ம ரிஷியை பார்க்க வருகிறார். ரிஷி தன்னோடு ஒருநாள் தங்கி உணவருந்திவிட்டுச் செல்லுமாறு இராமரை வற்புறுத்துகிறார். ஆனாலும் சீதையை அழைத்துக்கொண்டு அயோத்தி வருவதற்கு அவர் குறிப்பிட்ட 14 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பரதன் அக்னி வளர்த்து யாக குண்டத்தில் விழ வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இராமர் ரிஷியின் பேச்சை தவிர்க்க முடியாமல் இராமர் தனது கணையாழியை அனுமரிடம் தந்து பரதனிடம் அண்ணார் வருவார் என்று கூறி சமாதானம் செய்து வரும்படி கூறினாராம். அதுபடியே பரதனை அனுமார் சமாதானம் செய்துவிட்டு திரும்ப வந்தாராம். பின்னர் இராமரும் அனுமாரும் அமர்ந்து ஒரே வாழை இலையில் சாப்பிடுகின்றனர். அதற்கு வசதியாக ராமர் இலையின் மையத்தில் கோடு இழுத்தாராம். இராமர் இழுத்த இந்த கோடுதான் வாழை இலையின் மையத்தில் அமைந்துவிட்ட கோடு ஆகும். இந்த செய்தியை செவிவழிக் கதையாக இங்குள்ளோர் கூறுகிறார்கள்.

ஸ்ரீராமர் இத்தலத்தில் மட்டுமே அமர்ந்த நிலையில் உள்ளார் என்பது விசேசம். இராமருக்கு இந்தளவு பெரிய தனி ஆலயம் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. சின்முத்திரையோடு வலது கையை மார்பின் மீது வைத்து இடது கையை உட்கார்ந்த நிலையில் முட்டியின் மீது கைவைத்து அமர்ந்த திருக்கோலத்தில் அர்த்தம் சொல்வதுபோல் உள்ளது. கோதண்டம், வில் அம்பு இன்றி ராமர் இருப்பது இங்கு மட்டுமே. அதற்கு பதில் வில்அம்போடு இலட்சுமணர் அருகில் அமர்ந்துள்ளார். அனுமன் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே இருப்பது அரியதொன்று. அனுமன் சுவடி ஏந்தி வாசித்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறார். இங்கு தவம் செய்த சுகபிரம்ம ரிஷி வேண்டுகோளின் படி இராமர் இங்கு ஒருநாள் தங்கிச் சென்றாராம். யுத்தம் முடிந்து திரும்புவதால் இங்கு ராமர் கோதண்டம், வில் அம்பு ஏதுமின்றி இருக்கிறாராம். கர்ப்பகிரகம் சுற்றி வருவதற்கு குகை போன்ற உட்பிரகாரம் அமைந்துள்ளது. பரனூர் கிருஷ்ணாபிரேமி என்ற ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த இராமர்.

திருவிழா:

பங்குனி பிரம்மோற்சவம் – ஸ்ரீ ராம நவமி – 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஏழாம் நாள் நடைபெறும் திருத்தேர் விழாவும், பத்தாம் நாள் நடைபெறும் இந்திர விமானத் திருவிழாவும் அனைத்து மரபினரும் பங்கேற்று நடத்தும் பெரிய விழாவாகும். இது தவிர காணும் பொங்கலன்று ஸ்ரீராமச்சந்திர பெருமாள் மலையை வலம் வரும் வகையில் ஜகநாதபுரம், அரசம்பட்டு, வேப்பன்பட்டு வழியாக வில்லிவனம் சேத்துபட்டு கடைவீதி, பழம்பேட்டை முதலிய ஊர்களுக்குச் சேவையளித்துப் பின்னர் நெடுங்குன்றம் வந்து சேரும் விழாவும் சிறப்பானதாகும்.

வைகாசி விசாகம் – கருட சேவை கிருஷ்ண ஜெயந்தி – உறியடி உற்சவம் இவை தவிர வாரத்தின் சனிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகப் பெரிய அளவில் இருக்கும். வருடத்தின் விசேச நாட்களான தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் தினங்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேச பூஜைகள் நடைபெறும்.

வேண்டுகோள்:

இங்கு ராமர் சாந்த ராமராக உள்ளார்.இவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

சுதர்சன ஆழ்வாரை வணங்கினால் கல்யாண வரம் குழந்தை வரம் ஆகியன கைகூடுகிறது.

இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம்ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், கதம்ப பொடி, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யப்படுகின்றன. நெய்தீபம் ஏற்றுதல், துளசி மாலை சாத்துதல், வஸ்திரம் சாத்துதல், புடவை சாத்துதல், பூ கைங்கர்யம், பொருட்கள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கையும் செய்கின்னறனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர்த்திகடன் செய்பவர்கள் அன்னதானமும் செய்கிறார்கள்