விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டிய தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள  வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கி ஏந்தியபடி மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விக்கிவாண்டி தொகுதியில் ஜூலை 10ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கையானது நாளை (ஜுலை 13ந்தேதி) நடை பெற உள்ளது.  மொத்தம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கைகாக, மொத்தம்  14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு மேஜைகள்  தபால் வாக்கு எண்ணிக்கைக்காக போடப்பட்டு உள்ளதாகவும்,  தபால் வாக்குகள் அனைத்தும் ஒரே சுற்றாக எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி,  வாக்கு எண்ணிக்கை காரணமாக,  பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் தலைமையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

. ஒரு சுழற்சிக்கு ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், 8 உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள், 14 சிறப்பு காவல் படையினர், 8 மத்திய காவல் பாதுகாப்புப் படையினர் என நாளொன்றுக்கு 150 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து,  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், விக்கிவாண்டி தொகுதியல்,  ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும்,  ஜூலை 13ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறியது. மேலும்,  ஜூன் 14-ஆம் தேதிமுதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, ஜூன் 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, திமுக சார்பில்  அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு கடுமையான பிரசாரம் நடைபெற்று வந்தது. கடந்த 10ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களது வாக்கினை செலுத்தினார்.   82.48 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.