சென்னை:  விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தியதுடன், தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இவிஎம் கோளாறு காரணமாக,  5 வாக்குச்சாவடிகளில் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் பதற்றமான 110 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முன்னதாக,  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் (ஜுலை 8ந்தேதி) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  வாக்குப்பதிவையொட்டிடி,  இத்தொகுதிக்கு  இன்று (ஜூலை 10 ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Third Level Randomization )  நடத்தப்பட்டது. 3 மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் , 41 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.  220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் – 2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் – 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும், 44 பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அங்கு இன்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.   இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது குடும்பத்தினருடன் வந்து , அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42 வது வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் . விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் என்ற முறையில் நான்  “எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும்  ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். * மாண்புமிகு முதலமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.