சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து,  சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்  திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதுபோல உளத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவார்சிதமும் இடமாற்றம்  செய்யப்பட்டு உள்ளார்.  இதையடுத்து புதிய காவல் ஆணையராக,  சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண்  நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கஞ்சா போன்ற போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில்தான பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை மாநகர காவல்துறையும், உளவுத்துறையும் தோல்வி அடைந்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையளராக இருந்த சந்திப் ராய் ரத்தோரை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து அறிவித்து உள்ளது. அவருடம் மேலும் 2 காவல்துறை அதிகாரிகளையும் இடமாற்றம் செய்துள்ளது.

சந்திப்ராய் ரத்தோரை போலீஸ் டிரெயினிங் காலேஜ் டைரக்டராக இடமாற்றம் செய்துள்ளது.

மேலும் உளவுத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா பிறப்பித்திருக்கும் உத்தரவில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோர், காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழக போலீஸ் அகாதமியின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளார். மேலும், ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், இதுவரை அருண் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது,  ஆவடி காவல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். இவர் அப்போது அமைச்சராக இருந்த ஆவடி நாசரை சந்தித்தபோது, எங்களை கவனித்துக்கொள்ளுங்கள் என்று கூறிய வீடியோ வைரகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரத்தோர் திமுக ஆதரவாளர் என்று கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில், அவர்,  சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் பதவிக்கு வந்த பிறகு சென்னையில் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதனால், காவல்துறைமீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கொலை சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “படுகொலை நடந்த மூன்று மணிநேரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.  (8 பேர் சரணமடைந்ததாக கூறப்பட்டது – ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக கூறியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது)  மேலும், படுகொலையை நடத்திய நபர்கள்,  எந்த வாகனத்தில் வந்தார்கள், எம்மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் இருக்கும் போது என்ன நடந்தது என விசாரித்து, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருகிறதா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலு மீது 4 வழக்கு, மணிவண்ணன் மீது 4 வழக்கு என ஒருவர் தவிர மற்றவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

இதுவரை பிடிப்பட்டவர்களில் தென்மாவட்ட குற்றவாளிகள் இல்லை. பாலு வேலூர் மாவட்டம், மணிவண்ணன் திருவள்ளுர், திருமலை பெரம்பலூர். கடந்த ஓராண்டு காலமாக ஆயிரத்து 192 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுள்ளது. இதனால் அனைத்து ரவுடிகள் மீதும் இப்போது தீவிர கண்காணிப்பு உள்ளது. தற்பொழுது கூடுதல் கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக மிரட்டல் இருந்ததாக தகவல் இல்லை. அவர் அரசியலில் உள்ளதால் இதுகுறித்து உளவுத்துறை கண்காணிப்பில் கூட இதுமாதிரியான தகவல் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தது. அவை அனைத்தும் முடிவடைந்தது.

ஆம்ஸ்ட்ராங் அவரது அரசு அனுமதி பெற்ற கைத்துப்பாக்கியை தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின், அவர் பெற்றுள்ளார். அது அவரிடம் தான் உள்ளது. செம்பியம் காவல் நிலைய பகுதியில் பந்தர் கார்டன் பள்ளி மைதானத்திற்கு இப்போது அனைவரும் செல்கிறார்கள். இறுதிச்சடங்கு செய்யும் இடம் குறித்து இப்போது தகவல் இல்லை.

இப்போது போக்குவரத்து நிலைமை சீராக உள்ளது. காலை முதல் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், நாளை நடைபெறும் இறுதிச்சடங்கு வரை முக்கியமான இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 63 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இது 58-வது கொலை” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்! சீமான் பகீர் குற்றச்சாட்டு…