ரூர்

திமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கரூர் டவுன் காவல் நிலையத்தில் கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அதையொட்டி 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி கடந்த மாதம் 12-ந்தேதி முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  எனவே கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆவது முறையாக முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என தனது மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.  நேற்று இந்த மனு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எம். ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து 26 நாட்களாக  தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.