சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றதர உத்தரவிட்டுள்ளதாக  தெரிவித்து உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? பிஎஸ்பி தலைவர் மாயாவதி, எடப்பாடி, திருமா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…