சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் முகாமிட்டுள்ள  வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்,  விக்கிரவாண்டி தொகுதிக்குள் இருக்கும் அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஜூலை 10-ம்தேதி பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், ஆளும் கட்சி சார்பில் அன்னையூர் சிவா களமிறக்கப்பட்டு உள்ளார். அவரை வெற்றிபெற வைக்க திமுக அமைச்சர்கள் குழு அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு இலவசங்களம் வாரியிறைக்கப்பட்டு வருகிறது.  ஆனால், இதுபோன்ற செயல்களை தேர்தல் ஆணையம் கண்டும் காணாதது போல செயல்பட்டு வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டியில் வரும் 8ந்தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதையொட்டி, வெளி நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையர் சத்திய பிரதாக சாகு அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம்தேதி நடைபெற உள்ளது.பிரச்சாரம் 8-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அன்றுமாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை, யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.

தேர்தல் விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை வானொலி, வாட்ஸ்அப், முகநூல் மற்றும் வலைதளங்கள் வழியாக மக்கள் பார்வைக்கு வைக்கக் கூடாது. இந்த விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தொகுதிக்கு தொடர்பு இல்லாத அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறு   கூறப்பட்டுள்ளது.