தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

விஷச் சாராயம் மட்டுமில்லாமல், போதைப் பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சியினர் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம்.

ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். இந்த அரசு இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” என்று கூறினார்.

மேலும், காவல்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்தும் அவையில் குறிப்பிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், “கோடநாடு கொலை வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 8 செல்போன்கள் ஆய்விற்கு அனுப்பபட்டுள்ளது. வெளிநாட்டு அழைப்புகளும் இருப்பதால் இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

“காவல்துறையில் கடந்த 3 ஆண்டு காலத்தில் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு காவல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறு குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களை மாற்றுவதற்குப் பறவைத் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது.

புகார்களை விரைந்து விசாரிக்கவும் நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குற்றங்களின் எண்ணிக்கை குறைப்பது அல்ல குற்ற எண்ணத்தைக் குறைப்பது தான் காவல்துறையின் பணியாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தவிர, “மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும்” என்று கூறிய முதலமைச்சர் புதிதாக 201 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், ஏற்காட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ₹5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.