சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 34 ஆக அதிகரித்துள்ள நிலையில்,  உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் முதலர்வர் கள்ளச்சாராய சாவுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலம்  முழுவதும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், காவல்துறையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், போதை பொருள் தடுக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். ஆனால், சென்னை உள்பட பல பகுதிகளில் போதை பொருள், பாக்கெட் சாராயம் போன்றவை தாராளமாக புழக்கத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளும் 24மணி நேரமும் இயங்கி வருகிறது. இதனால், வயது பாகுபாடின்றி சிறுவர்கள் முதல் முதியோர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் போதைக்கு அடிமையாகி வருகின்றன. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு பெண்களுக்கு  மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கிய பிறகு, பெண்கள் வேலைக்கு போகாமல், குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில்தான்  பதபதைக்கும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் அரங்கேறி உள்ளது. இதில் பலியானர்வகளில் பலர் பெண்கள் என்பது அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறத. இதனால், உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டம் மற்றும் அலுவல் பணிகள் முடிந்த பிறகு, தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ. வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இதையடுத்து,. கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள்  தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி ஊக்குவித்ததுபோல, கள்ளக்குறிற்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி, கள்ளச்சாராய சந்தையை ஊக்குவிப்பாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டு மே  மாதம்,  விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்தனர்.  அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் இறந்தார்கள். இவர்களது குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.10 லட்சம் அறிவித்தது, விவாதப்பொருளாக மாறியது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், அதை குடிப்பவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்தது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் வழங்கி கள்ளச்சாராய விற்பனையையும், சாவையும் ஊக்குவிப்பாரா என  சமூ க வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.