சேலம்: தமிழக அரசுக்கு தெம்பும், திராணியும் இருந்தால் இந்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதை போல், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை இத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செந்தலங்கர சம்பத் குமார ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்ட  மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செந்தலங்கர சம்பத் குமார ராமானுஜ ஜீயர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, , “தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்து திருக்கோயில்கள் உள்ளன.  ஒவ்வொரு முறையும் எல்லோரும் சமம்… சாதி, மதம் ஒன்று… எனக் கூறிவரும் இந்த அரசு இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

இந்து திருக்கோயில்களை மட்டும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவமானம். தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை கொண்டுவர முடியவில்லை என்றால் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து, இந்து திருக்கோயில்கள் நீக்கப்பட வேண்டும். தற்போதுள்ள திமுக அரசிற்கு தெம்பும், திராணியும் இருந்தால் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இந்து திருக்கோயில்கள் இருப்பதைப் போல தேவாலயங்கள் மற்றும் மசூதிகளைக் கொண்டு வர வேண்டும்.

இந்து அறநிலையத் துறையில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளது. தமிழக அரசு திருக்கோயில்களில் தற்போது கும்பாபிஷேகம் நடத்தி வருகிறது. ஆனால் அரசு பணத்தில் செய்யாமல் பக்தர்கள் காணிக்கையாக கொண்டுவரும் பணத்தை வைத்து கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது என்றவர்,  . இந்து தர்மத்திற்காக அயராது உழைக்கும் நரேந்திர மோடி மூன்றாவது முறை மட்டுமல்ல இந்து தர்மம் காக்கும் வரை பிரதமராக இருப்பார் என்றார்.

திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, இந்துக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. தேர்தலின்போது இந்துக்களை இழிவாக பேசக்கூடிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கோயில் கோயிலாக சுற்றி வந்தனர். காரணம் தேர்தலின்போது வாக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டனர்.

இவ்வாறு கூறினார்.