சென்னை: திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம்  சர்ச்சையான நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம். அளித்துள்ளது.

திருச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் கட்டப்பட்டு  செயல்பாட்டில் உள்ள  எஸ்.ஆர்.எம். ஹோட்டலை, திடீரென திமுக அரசு காலி செய்ய திடீர் நடவடிக்கை எடுத்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த  விவகாரம் குறித்த தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,   திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994-ஆம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது.

மேற்படி இடம் குத்தகைதாரருக்கு 14.06.1994 அன்று ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட இந்த குத்தகை ஒப்பந்தமானது கடந்த 13-6-2024 அன்றுடன் முடிவடைந்து விட்டது. 1994ஆம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, மேற்படி நிலத்திற்குச் சந்தை விலையின் அடிப்படையில், 7 சதவீதம் வருடாந்திர குத்தகைத் தொகை கணக்கிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகைத் தொகை ரூ.47,93,85,941/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதில், நாளது தேதி வரை குத்தகைதாரர் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104/- மட்டுமே. மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837/-ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை. இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையைச் செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

குத்தகை ஒப்பந்தத்தில், மேற்படி நிலமானது 14.06.1994 முதல் 13.06.2024 வரையிலான 30 வருட காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகைக் காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குத்தகை முடியும் நாளில் குத்தகைதாரரால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு எவ்வித நிபந்தனையுமின்றி நிலம் மற்றும் கட்டடங்களை எவ்வித சேதாரமுமின்றி ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தின் சாராம்சத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 02.05.2024 நாளன்று (ஒரு மாத காலத்திற்கு முன்பாக) குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், குத்தகைக் காலம் 13.06.2024 அன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரரால் நாளது தேதி வரை நிலுவைத் தொகை ரூ.38,85,65,837/- செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையாகவே உள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குத்தகைக் காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகைத் தொகையைச் செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படிதான் முறையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக,  திருச்சி  காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தமிழக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் (SRM) நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது.   இந்த நட்சத்திர ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் குத்தகை பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஹோட்டலுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.  இதனால் அதிகாரிகளுக்கும், ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஹோட்டலை காலி செய்ய இன்று மாலை 3 மணி வரை அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக உள்பட  பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் எஸ்ஆர்எம் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவசர வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது எஸ்ஆர்எம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “எஸ்ஆர்எம்  விடுதியை திடீரென காலி செய்ய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும், போதிய கால அவகாசம் வழங்காமல் இவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஆகவே சுற்றுலா வளர்ச்சிக் கழக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டது

இதனையடுத்து, விடுதி நிர்வாகத்தை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், வழக்கை விரிவான விசாரணைக்காக  ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பாரிவேந்தர் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதனால், அவரை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.