பெங்களூரு

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு தல்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதில் ஒரு வழக்கில்  பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தனர்.

அவர் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. பிறகு அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் காவல்துறையினர் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் பெங்களூரு சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து, பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவான பலாத்கார வழக்கு குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காமல் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தன் மீதான பலாத்கார வழக்கில் முன்ஜாமீன் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.