சென்னை: 10ம் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என என ஏற்கனவே நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிவித்திருந்த நிலையில்,  தற்போது,  ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கான தேதிகளை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி,  10, 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும்,  28-06-2024 மற்றும் 03-07-2024  ஆகிய இரு நாட்களில் விழா நடைபெறும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளாக போட்டியாக நடிகர் விஜயும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.  இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம்   தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.  இதை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். இந்த கட்சி நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால்,   2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது.   அதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக தனது மக்கள் இயக்கம் சார்பில் ,மாணவ மாணவிகள் சிறப்பான கல்வியை பெறவும்,   10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  உதவி செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு முதன்முறையாக  0 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அவர்களின் பெற்றோர்களுடன்  அழைத்து நடிகர் விஜய் பாராட்டு விழா நடத்தினார். அவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும்  பாராட்டு விழா நடத்த உள்ளார்.   அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதில்,  கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி,   10, 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

அதன்படி, முதற்கட்டமாக வருகிற 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதியும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஜயின்-  தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் “தளபதி விஜய்” அவர்கள், 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த “10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்” வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் “தமிழக வெற்றிக் கழகம்” சார்பாகப் பாராட்ட உள்ளார்.

முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.