டெல்லி: நடைபெற்று முடிந்த 18வது மக்களவைக்கான தேர்தலில், 797 பெண் வேட்பாளர்கள் கமிறங்கிய நிலையில், 73 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதிக பட்சமாக பாஜக சார்பில் 30 பெண் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெண் எம்.பி.க்களின் விகிதம் வெறும்  13.44 சதவீதம் மட்டுமே.

கடந்த  2019ஆம் ஆண்டு  நடைபெபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் 78 பெண் எம்.பி-கள் தேர்வாகியிருந்த நிலையில், 18வது மக்களவை தேர்தலில் 73 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். மத்தியஅரசு நிறைவேற்றிய பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா எப்போது செயல்பாட்டு வரும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செப்டம்பர் 21, 2023 அன்று பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு தற்போது நடைபெற்ற   18வது மக்களவை மற்றும் முதல் மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.  மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனாலும், சட்டம் இயற்றப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எல்லை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்த மசோதா நடைமுறைக்கு வரும். இதனால் இந்த தேர்தலில் இந்த மசோதா நடைமுறைக்கு வரவில்லை.

இருந்தாலும், இந்த தேர்தலில்  மொத்தம்,  797 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாரதிய ஜனதா கட்சி அதிகபட்சமாக 69 பெண்களையும், காங்கிரஸ் 41 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியது.  தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி, அதன் வேட்பாளர்களில் 50% பெண்களுக்கு வழங்கியது. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 40% பெண் வேட்பாளர்களைக் கொண்டிருந்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பிஜு ஜனதா தளம் தலா 33% பெண்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 29%, சமாஜ்வாதி கட்சி 20% மற்றும் திரிணமூல் காங்கிரஸ் 25% பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கினர்.

 தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இம்முறை பாஜக சார்பில் 30 பெண்களும், காங்கிரஸிலிருந்து 14 பெண்களும், திரிணமூல் காங்கிரஸிலிருந்து 11 பெண்களும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 4 பெண்களும், திமுக சார்பில் 3 பெண்களும், ஜேடியு சார்பில் 2 பெண்களும், எல்ஜேபி (ஆர்) சார்பில் 2 பெண்களும் வெற்றி பெற்றனர்.

மாநிலங்களைப் பொறுத்தவரை மேற்கு வங்கம் அதிகபட்சமாக 11 பெண் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகிறது. மொத்தம் 73 பெண் எம்.பி.க்கள் 18வது மக்களவையை அலங்கறிக்க உள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, தேர்வாகியுள்ள 18வது மக்களவையில் 13.44% பெண் எம்.பி.க்கள் இருப்பார்கள். இது 1952க்குப் பிறகு அதிக விகிதங்களில் ஒன்றாகும். அதிகபட்சமாக 17வது மக்களவையில் 78 பெண் எம்.பி.க்கள் இருந்தனர், இது மொத்தத்தில் 14%க்கும் அதிகமாக இருந்தது. அதேநேரத்தில் 16வது மக்களவையில் 64 பெண் உறுப்பினர்களும், 15வது மக்களவையில் 52 பெண்களும் இருந்தனர்.

பாஜகவின் ஹேமா மாலினி, டிஎம்சியின் மஹுவா மொய்த்ரா, என்சிபியின் சுப்ரியா சுலே, திமுகவின் கனிமொழி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் ஆகியோர் முக்கியமான பெண் எம்.பிக்கள் ஆவர். நடிகை கங்கனா ரனாவத் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி ஆகியோரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். தற்போதைய பெண் எம்.பி.க்களின் விகிதம் வெறும்  13.44 சதவீதம் மட்டுமே.

மக்களவைத் தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மூன்று திருநங்கைகள் சுயேட்சைகளாக போட்டியிட்டனர், ஆனால் அவர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களும் அரசியலில் பங்கேற்கும் வகையில் 330சதவிகித ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் அதை முழுமையாக நிறைவேற்ற முன்வரவில்லை என்பதே தற்போதைய நிலைமை.

19-09-2023 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தில் 128-வது திருத்த மசோதா-2023-வாக அது தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஆனால், இந்த மசோதா இதுவரை முழுமையாக செயல்பாட்டு வரவில்லை.

இந்த மசோதா முழுமையாக செயல்படுத்தப்பட்டால்,  மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி சட்டமன்றம் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.  அதன்படி, 543 மக்களவை இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களில் இந்த ஒதுக்கீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.