சென்னை

நாளை தமிழகத்தில் வாக்கு எண்ணப்படுகிறது.

இந்தியப் பாராளுமன்றட்த்தின் 543 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  இவற்றில் இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இவற்றில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. இங்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணி ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம் சுமார் 3 ஆயிரத்து 300 மேஜைகளில் நடைபெற உள்ளது. தேவையான இடங்களில் 14-க்கும் அதிகமான மேஜைகள் பயன்படுத்தப்படும்.

நாளை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும். எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) முன்னிலையில் தேர்தல் எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

சென்னையை பொறுத்தவரையில் தென் சென்னை தொகுதியில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னை தொகுதியில் 31 வேட்பாளர்களும், வட சென்னை தொகுதியில் 35 வேட்பாளர்களும், திருவள்ளூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், காஞ்சீபுரம் தொகுதியில் 11 வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர்.

இதில், தென்சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இதேபோல் திருவள்ளூர் தொகுதிக்கு பெருமாள்பட்டு ஸ்ரீராம வித்யாமந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியிலும், காஞ்சீபுரம் தொகுதிக்கு பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.