கோவை: அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தடுத்து வஞ்சித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
கோவை மாமன்ற முன்னாள் மேயர் மலரவன் கடந்த 17ந்தேதி காலமனார். இதையொட்டி, கோவை தா. மலரவன் வீட்டுக்கு சென்ற முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ”மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், பல்வேறு கோவை நகரின் வளர்ச்சித் திட்டங்களைச் செய்து கொடுத்தவர்” என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளதாகவும், ஆனால் அதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசு தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியவர், தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது,, பல்வேறு தடுப்பணை கள் கட்டி தண்ணீரை சேமித்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டினோம். அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது.
தற்போது, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவ தால், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அதுபோல, கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இதே போல் ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக உள்ளனர். தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக் கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மக்களவை தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், தமிழ்நாட்டில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் பெயர்களை திமுக அரசு திட்டமிட்டு நீக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, கேலிக்கூத்தாக இருக்கிறது என்றவர், 40 இடங்களிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.