சென்னை

சுகாதாரத்துறை வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதாக எச்சரித்துள்ளது.

வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது.  வெஸ்ட் நைல் வைரஸ் பொதுவாக பறவைகளின் உடலில் காணப்படும். அப்பறவைகளை கொசுக்கள் கடிக்கும்போது அவற்றின் உடலில் இருந்து கொசுக்களின் உடலுக்கு வைரஸ் பரவுகிறது.

அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ‘கியூலக்ஸ்’ வகை கொசுக்கள் மனிதரைக் கடிக்கும்போது, வெஸ்ட் நைல் வைரஸ் மனிதா்களுக்குப் பரவுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தார் தற்போது. அதே வைரஸ் கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

சமீபத்தில் கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட=தைத் தொடர்ந்து, வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.  இதையொட்டி தமிழக பொது சுகாதாரத்துறை மக்களுக்கு கீழ்காணும் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளது.

சுகாதாரத்துறை,

” வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் காணப்படுவது இல்லை.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.  ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் ஏற்படலாம்.

மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம்.

அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, கழுத்து விரைப்பு, மயக்கம், பலவீனம், பக்கவாதம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் கட்டாயம் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்”

என அறிவுறுத்தி உள்ளது