சென்னை: தமிழ்நாட்டில், 14-ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், நேற்று வெளியான  10-ம் வகுப்பு  தேர்வு முடிவுகளை த் தொடர்ந்து, தேர்ச்சி பெறாதவர்கள்  துணைத் தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பம்  செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த  ஏப்ரல் 6ந்தேதி அன்று  பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று ( ஏப்ரல் 10ந்தேதி) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

இதையடுத்து,  மார்ச் மாதம் நடந்து முடிந்த 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி (செவ்வாய்கிழமை) வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம்  அறிவித்து உள்ளது.

இதற்கிடையில்,   10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத அவர்கள்  பயின்ற பள்ளிகளில் மே 16-ம் தேதி முதல் ஜுன் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி,   ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம்  அறிவித்து உள்ளது.