கோவை

ன்று பிரதமர் மோடி கோவை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலில்  தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காகப் பிரதமர் மோடி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று  தமிழகம் வரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில்  பங்கேற்கிறார்.

இந்த அணிவகுப்புக்குப் பிறகு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்குக் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கோவையில் பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறத்திலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த 3 நாட்களாகப் பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பிரிவைச் சேர்ந்த ஐ.ஜி. லவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆர்.எஸ்.புரத்தில் வாகன அணிவகுப்பு முடியும் இடத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று பிற்பகல் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் கோவை வந்து பிரதமர் வருகையையொட்டி போடப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் வாகன அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார்.

கோவைக்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகன அணிவகுப்பு நடைபெறும் சாலையில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாநகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே மாநகர பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மாநகர பகுதியில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.