சென்னை
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம்.
”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. இனி மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர் தங்கள் பணியைத் தொடங்கிவிடுவார்கள். தேர்தல் செலவினம் தொடர்பான குழுக்களின் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. இனி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவோம்.
சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரை, விளங்கோடு தொகுதிக்கு மட்டுமே ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் அளித்த செய்திக்குறிப்பில் முதலில் இடைத்தேர்தல் பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதியும் இடம் பெற்றிருந்தது. பின்னர் வெளியிடப்பட்ட கூடுதல் அறிக்கையில் திருக்கோவிலூர் தொகுதி இடம்பெறவில்லை. பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார்.
அமைச்சரவையில் புதிய அமைச்சரை சேர்க்க அரசு பரிந்துரைத்தால், அவரது பதவியேற்பு குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு பரிசீலிக்கும். பின்னர் அதுபற்றிய அறிக்கையைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும். தேர்தல் ஆணையம் என்ன முடிவை அறிவிக்கிறார்களோ, அதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரைதான் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்ல முடியும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு படை (மொத்தம் 1,404 படைகள்) அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொள்வார்கள். ”
என்று கூறி உள்ளார்.