டில்லி

தேர்தல் ஆணையர்கள்நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

கடந்த மாதம் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்., தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே இருக்கிறார். இரு தேர்தல் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் 15 ஆம் தேதிக்குள் நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்குர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில்,

“பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனூப் பரன்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

அந்த உத்தரவுக்கு முரணாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அந்த சட்டத்துக்கு எதிராக நான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர் பணியிடங்களைக் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டப்படி நியமிக்க உள்ளனர். 

தேர்தல் ஆணையர்களை புதிய சட்டப்படி, நியமிக்க தடை விதிக்க வேண்டும். மாறாக அனூப் பரன்வால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புப்படி, 2 தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

என்று அவர் கூறியுள்ளார்.

இந்த, மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.