சென்னை

ம்னி பேருந்துகள் பணிமனையில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நேற்று தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதை எதிர்த்து ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி அளித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.

ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் எனத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.  ஆம்னி பேருந்துகள் தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குவதால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும். எனவே சென்னை புறவழிச்சாலையில் போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக பஸ் பயணச்சீட்டு முன்பதிவு செயலிகளில் குறிப்பிட வேண்டும்.

மேலும் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்குவதை ஆம்னி பேருந்துகள் தவிர்க்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் முழு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து அறிய இயலும். அப்போதுதான் அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பதைப் பொதுமக்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கருத்தில் கொள்ளவேண்டும்.

என்று கூறப்பட்டுள்ளது.