சென்னை

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய வழக்கில் வரும் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமைச்சரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நேற்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதிட்டார். இந்த வழக்கு தொடர்பாகப் பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை என்றும், இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் புகார் கூறப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில், வழக்கின் விசாரணையை முடக்கி வைக்கும் நோக்கிலும், குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கிலும் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் 15 ஆம் தேதி வழங்கப்படும் என  நீதிபதி அல்லி அறிவித்தார்.