திருவண்ணாமலை:  நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ள  திருவண்ணாமலையின்  2668 அடி உயரமுள்ள மலைமீது, தீபத்தை ஏற்றுவதற்கான கொப்பரை எடுத்துச்செல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 17ந்தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பத்தாம் நாள் திருவிழா நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது.  அன்றைய தினம் மலைமீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி, நாளை அதிகாலை 4மணி அளவில்  அண்ணாமலையார் கோவில்  கருவறை முன்பு  பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.  மகா தீபம் ஏற்றப்படும் பஞ்ச லோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 – 3/4 அடி உயரமுள்ள கொப்பறை திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் போது பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தீப கொப்பரையை சுமந்து சென்றனர்.