சென்னை

சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மின்சார ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது.

நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் சென்னையில் உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இந்த ரயில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் வந்ததும், மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கிய ஒரு கல்லூரியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து மற்றொரு கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டியின் மீது சரமாரியாக வீசினர்.

இதற்குப் பதிலாக அவர்களும் கீழே இறங்கி, கற்களை வீசி எறிந்தனர்.இவ்வாறு  2 கல்லூரி மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்படு அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.  ரயில் அங்கிருந்து புறப்பட்டும் கல்லூரி மாணவர்கள், மின்சார ரயில் பெட்டி மீது கற்களை வீசி எறிந்தனர்.

அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்து கல் வீச்சில் இருந்து தப்பிக்க உடனடியாக ரயில் பெட்டியில் உள்ள கதவுகளை மூட முயற்சி செய்தனர். பல கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் குனிந்தும், ஒளிந்தும் கல்வீச்சில் இருந்து தப்பினர். சில கல்லூரி மாணவர்கள்  இந்த கல்வீச்சில் \ சிறிய அளவில் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக பெரம்பூர் ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கல்வீச்சில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் யார்? யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் ரூட் தல பிரச்சினையால் இந்த மோதலில் ஈடுபட்டார்களா? அல்லது முன்விரோதம் காரணமாகக் கல்வீசி தாக்கினார்களா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.